Friday, March 16, 2007

மு.மேத்தா நேர்காணல்



‘‘பெண்ணிய எழுத்து கண்ணிய எழுத்தாக இருக்க வேண்டும்!


‘‘ஒரு தமிழ்க் கவிஞர் இந்தியக் குடியரசுத் தலைவராகவும், இன்னொரு தமிழ்க் கவிஞர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருக்கிறபோது தமிழ்க் கவிதைகளுக்காக சாகித்ய அகாடமி விருது பெறுவதில் பெருமிதம்அடைகி றேன்! என்கிறார் கவிஞர் மு.மேத்தா.
‘‘இந்த விருது இரண்டு வித மகிழ்ச்சியை எனக்கு அளித்திருக்கிறது. ‘ஏன் இன்னும் உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை? என்று இனிமேல் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள். இன்னொரு மகிழ்ச்சி, ‘இந்தவிருதை இவருக்கு ஏன் கொடுத்தார்கள்? என்று இதுவரை யாரும் குரல் எழுப்பவில்லை.

ஆனாலும், ஒரு விஷயம்... விருதுக்குரிய புத்தகத்தை, அது கடைசி மூன்று ஆண்டுகளில் வெளிவந்திருக்கிற புத்தகமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள். அது தவறு என்பது என் கருத்து. உதாரணமாக, 23 மொழிகளுக்கு, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு படைப்பாளிக்கு என விருது தருகிறார்கள். ‘புடவைக் கடை என்கிற ஆங்கிலக் கவிதை நூலுக்காக, சாகித்ய அகாடமி விருதை 30 வயதுப் பெண்மணி பெற்றார். குஜராத்தி மொழிக்கான விருது 88 வயதுப் பெரியவருக்குக் கிடைத்தது. ஒரு பக்கம் அந்தப் பெண்மணி அவருடைய முதல் நூலிலேயே விருதைப் பெற்றது மகிழ்ச்சி. இன்னொரு புறம், தள்ளாடித் தடுமாறி மேடையிலேயே விழுந்துவிடுகிற வயதில் ஒரு பெரியவருக்கும் விருது. அவர் இத்தனை ஆண்டுக் காலம் எவ்வளவு எழுதியிருப்பார்!

இத்தனைக் காலமும் அவர் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்று நியாயமான கோபம் தோன்றுகிறது. சில சமயங்களில் இதுபோன்ற அறியாமைகள் நிகழ்ந்துவிடுகின்றன. சில நல்ல படைப்பாளிகள்கூட சரியான கால கட்டங்களில் கவனிக்கப்படாமல் மறுக்கப்படுகிறார்கள். இலக்கிய வாழ்வின் அபத்தங்களில் இதுவும் ஒன்று!

‘‘இளம் படைப்பாளிகள் பற்றி...


‘‘நம்பிக்கை தருகிற மாதிரியான இளம் படைப்பாளிகள் இன்று நிறையவே இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை தருகிற சூழ்நிலை குறைந்து வருகிறது. மக்களின் ரசனைப் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இன்றைய இளம் படைப்பாளிகளின் சுயதரிசனங்களுக்கு ஏற்றதாக இல்லை.

இன்னொரு புறம், புதுக்கவிதைகளின் போக்கைப் பார்க்கும்போது மறுபடியும் மரபுக்கே போய்விடலாம் என்று தோன்றுகிறது. காரணம், மரபுக்கென்று ஒரு வரம்பு இருக்கிறது. ஒரு மொழியின் லாகவம் கைக்கு வந்தால்தான், மரபுக் கவிதை கை வரும். புவியரசு, சிற்பி, அப்துல் ரகுமான், பாலா, சக்திக்கனல், தமிழ்நாடன் என மரபில் எழுதி வெற்றி பெற்றவர்கள் புதுக்கவிதை எழுதியபோது, அதில் மரபின் அழகியலையும் நுட்பங்களையும் கொண்டு வந்தனர். புதுக்கவிதையின் புதுமையும் மரபின் செழுமையும் சேர்ந்து அந்த வடிவம் வெற்றிபெற்றது. இன்றைக்கு புதுக்கவிதை வேறொரு பாதைக்குப் போய்விட்டது. ஜோக்குகளை கவிதைகள் போல எழுதுகிறார்கள். கவிதைக்கென்று இருந்த அழகும் கம்பீரமும் போய்விட்டன. முன்பாவது வரிகளை மடித்து மடித்து எழுதி அதைப் புதுக்கவிதை என்றார்கள். இப்போது வரிகளையும் மடிக்காமல் அப்படியே உரைநடை வடிவில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இது எங்கே போய் முடியுமோ?

‘‘தற்போதைய பெண் கவிஞர்களின் வருகை பற்றி..?

‘‘பல பெண்கள் எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது; சில பெண்கள் எழுதுவது அதிர்ச்சியாக இருக்கிறது. தன் வலியைக் காட்டுவதற்குப் பதிலாக, தன்னையே காட்டிவிடத் துடிக்கும் வேகம் தவறு என்பது என் கருத்து. ஏதாவது செய்து எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்க்கவைத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் சரியானதல்ல. அவர்கள் இதை ஆரோக் கியமாக அவர்களுக்குள்ளேயே விவாதித்துக்கொள்வது நல்லது. ஆண்கள் அது பற்றிச் சொல்கிற போது அவர்களுக்குக் கோபம் வருகிறது. தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டியது எல்லோ ரின் கடமை. பெண்ணிய எழுத்து என்பது கண்ணிய எழுத்தாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!

& கண்களில் கனிவும் வார்த்தைகளில் மென்மையையும் கையாள்கிற மேத்தாவின் அலு வலகத்தில் இருந்து வெளியே வருகையில் கடக்கிற காரில் இருந்து கசிகிறது ஒரு பாட்டு... ‘நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா?


\ நா.இரமேஷ்குமார்

நன்றி; ஆனந்த விகடன்

No comments: